DEFEAT THE DEFEAT BEFORE THE DEFEAT DEFEATS YOU

Monday, December 26, 2011

மனுஷ்யபுத்திரனின் நூல் வெளியீட்டு விழாவில்..!



தமிழின் முன்னணி எழுத்தாளர்களின் புத்தக வெளியீடு அல்லது இலக்கிய சபை எதற்கும் இதுவரை போனதில்லை. விரும்பியதும் இல்லை. புத்தக கண்காட்சி நடக்கையில் மேடையில் சில கவிஞர்கள் ஒலிபெருக்கியை முழுங்கி முழங்குவதை சில நிமிடங்கள் கேட்டதோடு சரி. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் விதிவசத்தால் ஞாயிறு மாலை அமைந்து விட்டது. உபயம் பகுத்தறிவாள பதிவர். இடம்: தேவநேயப்பாவாணர் அரங்கம், அண்ணா சாலை ,  சென்னை(தான்). மனுஷ்யபுத்திரனின் 'பசித்த பொழுது' கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா. என்னைப்போன்ற விகடன், குமுதம் படிக்கும் சராசரி வாசகனின் கண்கள் மேடையில் தேடியது ஒன்றைத்தான். 'நமக்கு புரியும் வண்ணம் எளிய நடையில் பேசுபவர் எவரேனும் மேடையில் உள்ளனரா? இல்லாவிடில் 'எட்றா ஓட்டம்'.  ருத்ரன், மனுஷ்யபுத்திரன், ஷாஜி, எஸ்.ரா., போன்றோரை மட்டும் அடையாளம் காண முடிந்தது. அவர்களருகே மதனை(விகடன்) கண்டதும்தான் பெருமூச்சு விட்டேன். நமக்கு புரியும்படி பேச ஒருவர் உள்ளாரே என்று. 

அழகிய பெரியவன் என்பவர் பேசினார். எனக்கு பெரிய ஈர்ப்பு எதுவுமில்லை. அடுத்து வந்தவர் அபிலாஷ். பேசினார். பேசினார். பேசிக்கொண்டே இருந்தார். எழுதுபவர்கள் அனைவரும் நன்றாக..ஏன் சுமாராக கூட பேசுவது கடினம் என்று கேட்டிருக்கிறேன். அதை பரிபூரணமாக அனுபவித்தேன். பேசி முடித்ததும் முன் வரிசையில் இருந்தவர் மட்டும் 'ஆளை விட்டா போதும்' என வாயால் சொல்லாமல் அழுத்தி கைதட்ட, நான் மேலும் சில தட்டல்களை அழுத்தி போட்டேன். எவன்டா அவன் என கழுத்தை திருப்பி பார்த்தனர் சிலர். கோவப்படுகிறார்களாம். நான் அனுபவித்த கொடுமையின் வலியை காட்ட வேறு வழி தெரியவில்லையே. என்ன செய்ய?  


அடுத்து வந்தார் மதன். அவர் பேசியது "ம.புத்திரனின் புத்தகம் படிக்க நேர நெருக்கடி இருந்ததால் சில கவிதைகளை மட்டும் படித்துவிட்டு பேச வரலாம் என எண்ணினேன். அதன் ஈர்ப்பால் கவரப்பட்டு இரண்டே இரவுகளில் மொத்த கவிதைகளையும் படித்துவிட்டேன். That's the greatness of கவிஞர். I again read that கவிதை(தமிங்கிலீஷ் மதன் வாழ்க). ஆங்கிலத்தில் ஒரு சொல் உண்டு. உன் நண்பனை பற்றிச்சொல். உன்னைப்பற்றி சொல்கிறேன் என்று. அதுபோல் என் மாதிரி பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வோருக்கும் ஒரு சொல் உண்டு. 'நீ கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளைப்பற்றி சொல். உன் தகுதி பற்றி சொல்கிறேன்' என்று.(அரங்கில் சிரிப்பொலி).     

இத்தொகுப்பில் இடம்பெற்ற கவிதைகள் எதையும் முழுதாக படித்து காட்ட விரும்பவில்லை. தலைப்புகளை மட்டும் கோடிட்டு காட்டுகிறேன். 'உற்றுப்பார்த்ததில்' எனும் தலைப்பில் ஒரு கவிதையையும் படித்தேன். நூலில் ஒரு பிழை கண்டேன். 'இந்த' என்பது 'இத' என்று அச்சாகியுள்ளது. கவனிக்க தவறிவிட்டீர்கள். இதை நான் இங்கு சொல்லவும் நீங்கள்தான் காரணம்(ம.புத்திரனை பார்த்து). நான் 'உற்றுப்பார்த்ததில்' கண்ட பிழை" என்று அழகாக பேசிவிட்டு உடனே கிளம்பினார் மதன்.    

                                                                          
அடுத்து ஷாஜி(இசை விமர்சகர்).  இவருடைய இணைய தளத்தில் ஒருமுறை இளையராஜா குறித்த பதிவை படித்துள்ளேன். இசைஞானியை கிழித்து எழுதி இருந்தார். மற்றபடி இவர் குறித்து எதுவும் அறியேன். மனிதர் மலையாளி எனினும் நாக்கில் பிசிறில்லாமல் தமிழ் விளையாடுகிறது. அவர் பேசியது:

"90% படைப்புகளை மொழிபெயர்ப்பது மிகக்கடினமானது அல்லது அதற்கு வாய்ப்பே இல்லை. ஏனெனில் அந்த படைப்பு மொழிபெயர்க்கப்படும் இடம் சார்ந்த மக்களின் வாழ்வுடன் தொடர்பு படுவதற்கான வாய்ப்பு மிகக்குறைவு. மனுஷ்ய புத்திரன் என்னிடம் தொடர்பு கொண்டு தன் 'பசித்த பொழுது' நூலை ஆங்கிலம், மலையாளத்தில் மொழிபெயர்க்க சொன்னார். எனக்கும் கவிஞனாகும் ஆசை இருந்தது. அந்த அரிப்பு யாருக்குத்தான் இல்லை. 

அதற்கு நீ சரிப்பட மாட்டாய் என பலர் சொன்னதால் அந்தக்கனவை தூங்க வைத்து விட்டேன். மொழிபெயர்ப்பு செய்யும் பணியையாவது செய்யலாம் என்று எண்ணினேன். மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் உலகம் முழுதும் உள்ள மனிதர்களுக்கானது. எனவே அப்பணியை செய்ததில் மகிழ்ச்சி" என்றமர்ந்தார்.

தமிழச்சி தங்கபாண்டியன் சில நொடிகள் கண்ணில் பட்டுவிட்டு சென்று விட்டார். மேடம் வயசை தொலைத்தவர் என்பது உண்மைதான். இளமையின் ரகசியம் என்னவோ? ருத்ரனும் சட்டென வெளியேறிவிட்டார். 
                                                               
                                                                        
எல்லாரையும் தாண்டி அனைவரும் ரசிக்கும் வண்ணம் பேசி நிறைய கரகோஷத்தை அள்ளியவர் பாரதி கிருஷ்ணகுமார். சாதாரண பேச்சு நடையில் மனதை கொள்ளை கொண்டார். உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். அவர் பேசியது: 

"எனக்கு உடம்பு சரியில்ல. இருந்தாலும் வந்தேன். ஏன்னா நிஜமாவே உடம்பு சரியில்லைன்னு பேச்சாளர் யார் சொன்னாலும் பொய் சொல்றான்னு சொல்லி சொல்லியே அதை மெய்யாக்கிட்டாங்க. உங்க மனசுல என்ன இருக்கோ அதுதான் என் மனசுலயும் இருக்கு(முதலில் பேசிய இருவர் நீட்டி முழக்கியதை பாரதி நையாண்டி செய்தது போல் இருந்தது எனக்கு). மனுஷ்யனின் கவிதைகள் தொகுப்பாக வந்தது மகிழ்ச்சி. அதில் ஒன்று 'எந்த கடவுளை கொன்றேனோ அதே கடவுளிடம் கேட்கும் நீதி'. அதை இப்படி எழுதி இருக்கலாம் 'எந்த கடவுள் என்னைக்கொன்றாரே அந்தக்கடவுளிடமே  கேட்கும் நீதி'. 

வாசகர் சந்திப்பு எனும் தலைப்பில் அருமையான கவிதை ஒன்றை எழுதி இருக்கிறார் ம.புத்திரன். என்னைப்பொறுத்தவரை ஒருவனின் படைப்பை படிக்கும் வாசகன் அவனை விட ஓரடி முன்னே நிற்க வேண்டும். அதுதான் படைப்பாளியின் வெற்றி. உதாரணத்திற்கு, எனக்குத்தெரிந்த எழுத்தாளர் ஒருவரைக்காண வாசகர் ஒருவர் வந்தார். "சார். சில ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் எழுதிய கதையில் குட்டி இளவரசி ஒருத்தி இருந்தாள். அவள் இப்போது வளர்ந்து விட்டாளா? அவளைப்பார்க்கலாமா?" எனக்கேட்டார். அந்த படைப்பின் தாக்கம் எப்படி இருந்தது எனப்பாருங்கள். அவ்வாசகர் மேலும் கேட்கிறார் "சார். அவள் இப்போது இங்கே இல்லாவிடினும் பரவாயில்லை. அவளுடைய புகைப்படத்தையாவது காட்டுங்கள். பார்த்துவிட்டு செல்கிறேன்". என்றோ எழுதி முடித்த படைப்பில் வரும் ஒரு கதாபாத்திரம் இன்றும் உயிருடன் உள்ளதென ஒரு வாசகனை நம்ப வைக்கும் அளவிற்கு இருத்தல் வேண்டும் படைப்பவனின் ஆற்றல்.

எனக்கும் இது போலொரு சம்பவம் நடந்தது. நான் எழுதிய கதை ஒன்றில் இரு காதலர்கள்.இடையில் ஏற்படும் பிரச்னையால் மணம் செய்யாமல் பிரிகின்றனர்.அந்த சோகத்தில் காதலன் (கண்ணுசாமி)மொட்டை போட்டுக்கொள்கிறான். காதலி வேறொருவனை மணமுடிக்கிறாள். வருடங்கள் ஓடுகின்றன. தள்ளாத வயதில் மரணத்தின் வாசலில் அவள் இருக்கிறாள். உறவினர் பலர் வாயில் வகை வகையான திரவங்களிட்டும் அவள் உயிர் பிரியவில்லை. கண்ணுசாமி வந்தால் மட்டுமே அவள் உயிர் அமைதியாக போகுமென உணர்கிறான் கணவன். கண்ணுசாமியை அழைத்தது வந்து அவளின் நீரூற்ற சொல்கிறான் கணவன். முன்னாள் காதலன் தன்  வாயில் நீரூற்றியதும் இறக்கிறாள் அவள். கண்ணுசாமியின் காலடித்தடங்கள் பேருந்து நிலையத்தை நோக்கி செல்கின்றன" என கதையை முடித்தேன்.

அதன் பின் வாசகர் ஒருவரிடம் இருந்து எனக்கொரு தொலைபேசி அழைப்பு, "சார். கண்ணுசாமி எங்கே போனான்?" எனக்கேட்டார்.  என்ன பதில் சொல்ல? ஆம். அவன் கேட்டது நியாயம்தானே? எங்கே போனான் அந்த கண்ணுசாமி? கதையை நீட்டிக்கலாமே என எண்ணினேன்.அதுதான் வாசகன். படைப்பாளியை தாண்டி செல்பவனாக அவன் இருந்தால் மட்டுமே அது மகத்தான படைப்பு. மகத்தான படைப்புகளை மகத்தானவர்கள் மட்டுமே படிப்பதில்லை. 'எல்லோரும் படிக்கிறார்கள்' (எல்லோரும் படிக்கிறார்கள் என பாரதி கிருஷ்ணகுமார் அடித்த நக்கலில் சிரிப்பொலி சபை முழுதும்).

விருந்தாளி எனும் தலைப்பில் மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்று. அதை பேச்சுவழக்கில் சொல்கிறேன். 'விருந்தாளி ஒருவன் சொந்தக்காரன் வீட்டில் சில தினங்கள் தங்கிவிட்டு 'கிளம்புகிறேன்' என்று சொல்லிவிட்டு செல்கிறான். ஆனால் சில நிமிடங்கள் கழித்து "இருட்டாக இருந்ததால் வெளியே செல்வதாக எண்ணிக்கொண்டு தெரியாமல் உன் படுக்கை அறைக்கு வந்து விட்டேன்" என்கிறான். அதற்கு உபசரித்தவன் சொல்கிறான் "பரவாயில்லை. இங்கிருந்தும் வெளியேற ஒரு ரகசிய அறையுண்டு". அடேங்கப்பா. (மனுஷ்யனை கண்டு பாராட்டு மழை பொழிகிறார் பாரதி). ம.புத்திரன் எழுதிய மற்றொன்றும் நன்றாக இருந்தது: "அழியும் டைனோசர்களில் கடைசி டைனோசராக நான் இருக்க வேண்டும். அதன்பின் சின்னஞ்சிறு பூச்சிகள் வாழ்ந்து விட்டு போகட்டும்". இப்படி மேலும் சில நகைச்சுவை ததும்பும் பேச்சோடு உரையை முடித்தார் பாரதி கிருஷ்ணகுமார். அடுத்த நிமிடமே நிறைய பேர் வெளியே சென்றனர். பாரதி பேச்சை மட்டுமே கேட்க ஆவலுடன்  வந்தவர்கள் எனத்தெரிந்தது.

பாரதின் பேச்சினூடே திடீரென வெளியே இருந்து கதவை திறக்க முற்பட்டும்,  சத்தமிட்டவாரும் ஒருவர் பிரச்னை செய்து கொண்டிருந்தார். சிலர் அவரை வெளியேற்றினர். அவர் பெயர் ரமேஷ் வைத்யா என அறிந்தேன். சரக்கு அடித்துவிட்டு உள்ளே வந்து யாரையோ எதிர்த்து பேச வந்தாராம். இது போன்ற பெருஞ்சபையில் இம்மாதிரி நிகழ்வுகள் நடக்குமென கேள்விப்பட்டதுண்டு. இப்போதுதான் பார்க்கிறேன். அம்மாடி. நிஜமாகவே 'தீவிர' 'வாதி'களை உடையதுதான் இந்த இலக்கிய வட்டம் போல.

அடுத்து பேச வந்தவர் எஸ்.ரா. எடுத்த எடுப்பிலேயே முன்பு பேசியவர்களை உரசுவதுபோல் ஆரம்பித்தார்: "கவிதைகள் குறித்து பேசுபவர்கள் அனைவரும் ஏன் கவிதையை விட்டு வெளியேறுவதே இல்லை? நூலில் இருக்கும் கவிதைகளை மீண்டும் அவையில் வாசித்து காட்டுவதும், அதிலிருக்கும் வரிகளை சிலாகித்து பேசுவதும் மட்டுமே தொடர்ந்து நடக்கிறது. எனக்கு அதில் உடன்பாடில்லை" (உடனே கீழே இருந்த சிலர் வெளியேற ஆரம்பித்தனர். பாரதி கிருஷ்ணகுமாரும்தான்). எஸ்.ரா. நன்றாக எழுதுபவர் என்று மட்டும் எனக்கு தெரியும். வலைப்பூக்கள் வாயிலாகவும் அவர் குறித்த லேசான பரிச்சயமுண்டு. நானும் வெளியே சென்று "ஏன் எஸ்.ரா பேசுகையில் வெளியே வந்தீர்கள்" என்றேன். "ஏனெனில் பேசுவது எஸ்.ரா" என்று பொடிபோட்டனர்.

அப்படி என்னதான் உள்ளது அவர் பேச்சில் என அறிய நான் மீண்டும் உள்ளே நுழைந்தேன். உண்மைதான். மையக்கருத்தை விட்டுவிட்டு வேறுபாதையில் வலம் வருவது போலிருந்தது அந்த உரை. ஒருவேளை எனக்கு முதல் அனுபவம் என்பதால் அவர் பேச்சை இன்னும் சிலமுறை கேட்டால் தெளிவு கிடைக்கலாம்.

                                                                           
விழா நாயகர் மனுஷ்யபுத்திரன் இறுதியாக பேசினார் இவ்வாறு: "இந்த சில மணிநேரத்தில்  அவ்வப்போது சிலர் வெளியே செல்ல, புதிதாக சில முகங்கள் கதவைத்திறந்து உள்ளே வந்தமரும் நாடகம்(!) கண்டேன். இருக்கைகள் காலியாவதும், பின்பு நிரப்பப்படுவதையும் பார்த்தோம். அதுபோல்தான் நானும். முந்தைய படைப்பாளிகள் விட்டுச்சென்ற இடத்தை நான் நிரப்புகிறேன். நாளை என் இடத்தை மற்றொருவர் நிரப்புவார். நன்றி".  ரத்தின சுருக்கமாக பேச்சை முடித்துக்கொண்டார். இக்கவிதை தொகுப்பு குறித்து அனைவரும் பொதுவாக சொன்ன விஷயம் ஒன்றுதான்: 'படித்து முடித்ததும் வேறொரு உலகிற்கு மனதை கொண்டு/கொன்று சென்று விட்டது 'பசித்த பொழுது''.
.................................................................................

இலக்கியம், கவிதை போன்றவற்றில் அடிப்படை அறிவு கூட இல்லாத என் போன்றோருக்கு பாரதி, ஷாஜி, மதன் போன்றோரின் பேச்சுகள்தான் இருக்கையில் அமர வைக்கும் வரத்தை தருகின்றன. பேச்சையும், நூல் குறித்த அறிமுகம் மற்றும் அதன் சிறப்பை அறிய விரும்பும் எம்மைபோன்ற பாமரர்களுக்கு இலக்கிய வட்டார உள்குத்து பேச்சுகள் தேவையே இல்லை. ஆனால் இதுதான் காலம் காலமாக சான்றோர் சபைகளில் நடைபெறும் என கேள்விப்பட்டதுண்டு. எமக்கு புரியும் வண்ணம், நிகழ்ச்சிக்கு சம்மந்தப்பட்ட விஷயங்களை மட்டும் பேசிவிட்டு அதன் பின் ஆற அமர(அமர முடியாவிடில் முறைத்து நிற்க) வெளியே சென்று இலக்கிய சண்டையை தொடருங்கள். கிழியும் சட்டைகளுக்கு மாற்று சட்டை ஏற்பாடு செய்யவும் நாங்கள் தயார்.

இதுபோன்ற சபைகளில் இனி அமரும் எண்ணம் லேசாக துளிர்த்திருகிறது. பேரச்சம் வேண்டாம் பெரியோரே. எக்காலத்திலும் இலக்கியம், கவிதை படைத்து உங்களை மீளாத்துயரில் ஆழ்த்த மாட்டேன். அது எமக்கு  சுட்டுப்போட்டாலும் வராது. வரவும் வேண்டாம். மதன், ஷாஜி, பாரதி கிருஷ்ணகுமார் போன்றோரின் எளிமையான, தகவல்கள் பல தரும், நகைச்சுவை கலந்த பேச்சை கேட்க இனி நேரம் கிடைக்கும்போதெல்லாம் சென்று பார்க்க தீர்மானித்தாகிவிட்டது!!
...........................................................................................

'பசித்த பொழுது' நூலின் விலை ரூ.350.
தொடர்புக்கு:
11/29, சுப்பிரமணியம் தெரு,
அபிராமபுரம்,
சென்னை - 18.
தொலைபேசி: 044-2499 3448.
இணையம்: uyirmmai.com
மின்னஞ்சல்: uyirmmai@gmail.com
...............................................................................................

அவள் காலடி மண்ணை நான் பார்க்க....
என் கால் புண்ணை அவள் நோக்க...
'கொஞ்சம் தள்ளி போங்க' என்று வேலைக்கு செல்பவர்
எம்மிருவரை விலக்கி நடக்க
மறுநொடி தொடர்ந்ததெமது வேலை.

(அடடே எனக்கும் கவிதை வருதே!)
.................................................................................


...................................
My other site:
madrasbhavan.com
................................


10 comments:

கே.ஆர்.பி.செந்தில் said...

யாத்தே.. யாத்தே... என்னாச்சோ...

Stumblednews said...

If you have an English blog, submit your post at Stumblednews.0fees.net to get more visitors to your blog.

சேலம் தேவா said...

சுவாரஸ்யமான நிகழ்ச்சித்தொகுப்பு..!!

♔ம.தி.சுதா♔ said...

நீங்கள் குறிப்பிட்டதில் இருந்து தங்களது இலக்கிய ரசனை தெரிகிறது...

அத்துடன்... நீங்கள் குறிப்பிட்டவர்களில் மதன் போலவே என் வர்ணனையும் இருந்திருக்கும்... அருமை..

நன்றி நன்றி...

♔ம.தி.சுதா♔ said...

சகோதரம் நீங்கள் செப்டெம்பர் 7 ம் திகதி எழுதிய பதிவை இன்றுதான் பார்த்தேன்... மிக்க நன்றி..

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என்றும் கடவுள் அருள்புரிவாராக....

Rathnavel said...

அருமையான பதிவு.
வாழ்த்துகள்.

FOOD NELLAI said...

// நானும். முந்தைய படைப்பாளிகள் விட்டுச்சென்ற இடத்தை நான் நிரப்புகிறேன். நாளை என் இடத்தை மற்றொருவர் நிரப்புவார். நன்றி//
யாவ்ருக்கும் பொருந்தும் சத்திய வார்த்தைகள்.

ஜீ... said...

நீங்கள் எல்லாம் கொடுத்து வைத்தவர்கள் பாஸ்!
மதன், எஸ்.ரா, ஷாஜி, மனுஷ்யபுத்திரன் இவர்களின் எழுத்துகள் தாண்டி பேச்சையெல்லாம் நேரில் கேட்க முடிகிறது!
'அழகிய பெரியவன்' சிறுகதைகள் சில படித்திருக்கிறேன். அவரது எழுத்து நல்லாயிருக்கும் பாஸ்! பேச்சு பற்றித் தெரியாது!
அருமையான பதிவு! நன்றி!

FOOD NELLAI said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

அண்ணே பவர்ஸ்டார் உங்கள பார்த்து கைய காட்டி என்னமோ சொல்றாரே?

Related Posts Plugin for WordPress, Blogger...